![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh9yDpcCBpUZbeCE41ubc9P2bLdj88ScNo92I42T8RiCckjVaHDsPK_XW-dlKDiCILAOYdcXQ5mQVWhsGlJ3hVlXMDNN64cP7BrDDkPkx6gPJqVG7nv0y86on6PJCb0QCezMnGICMri2n0/s400/chakras.JPG)
யோகம் என்பது ஐந்து வகைப்படும். அவை
கர்மயோகம், பக்தியோகம், ஞாநயோகம், ராஜயோகம், மந்திர யோகம் எனப்படும். இவற்றுக்கும் இங்கே நாம் பார்க்கப் போகும் யோகாசனப் பயிற்சிக்கும் வேறுபாடு உண்டு. மேற்சொன்ன யோகங்களை நாம் பயில இந்த யோகாசனப் பயிற்சியே அடிப்படையாகச் செயல்படுகிறது. யோகாசனப் பயிற்சிகளால் நம் மனம் ஒருமுகப் படும். மன அமைதியும், மனக்கட்டுப்பாடும் ஏற்படும். மனத்திற்கு மாபெரும் ஆற்றல் ஏற்படுகிறது. எத்தகைய செயலையும் எளிதில் செய்யவும். எதையும் தாங்கும் ஆற்றலும் ஏற்படுகிறது. உடல் நலம் பெறுகிறது. ஆன்மீகம் மேம்படுகிறது. இங்கே ஆன்மீகம் எனக் குறிப்பிடுவது அனைவரும் நினைப்பது போல் இறை வழிபாடு அல்ல. உண்மையான ஆன்மீகம் என்பது உள்முகத் தேடல். அத்தகைய தேடலுக்கு இது வழி காட்டுகிறது.
உடலும் மனமும் சேர்ந்து இயங்க வேண்டும் இந்த யோகாசனப் பயிற்சிகளின் போது. அப்போது தான் மனம் ஒருமுகப் படும். இதற்கு தியானம் பெருமளவில் உதவுகிறது. பிராணாயாமம் செய்வதன் மூலம் மனதை ஒருமுகப் படுத்தி தியானத்தில் ஆழ்ந்து போகலாம்.
இவற்றுக்கெல்லாம் அடிப்படையாக நாம் முதலில் நம் உடலைப் பாதுகாக்க வேண்டும். நாம் உண்ணும் உணவின் மூலமே உடல் பாதிப்படையாமல் இருக்கும். உணவும் அளவோடு உண்ண வேண்டும். முறையான உணவாயும் இருக்க வேண்டும். உணவின் தரத்தையும் வளத்தையும் பொறுத்தே நம் உடல் வலிமை பெறுகிறது. சரியான உணவுப் பழக்கங்களைக் கடைப் பிடித்தல், அவ்வாறு கடைப்பிடிக்கச் செய்வது யோகாசனப் பயிற்சியாளரின் கடமையாகும். உணவும் மூன்று பிரிவாய்ப் பிரிக்கப் பட்டுள்ளது. அவை ராஜஸ உணவு, சத்வ உணவு, தாமஸ உணவு ஆகியவை ஆகும். இம்மூன்றில் சத்துவ உணவே சிறந்ததும் முதன்மையானதும் ஆகும். இவை எளிமையானதும் கூட. காய், கனிகள் நிறைந்த உணவே சத்துவ உணவு எனப்படும். இவற்றில் மிருகங்களின் மாமிசங்கள் சேராது. அதிகக் காரமோ, உப்போ, புளிப்போ இல்லாமல் மிதமான காரத்தோடும் உப்பு, புளிப்போடும் சாப்பிடவேண்டும். கூடியவரை காய்களை வேகவைத்து உண்ணவேண்டும்.